Monday, July 07, 2014

பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம்


இந்தியாவில் இருந்து ஐரோப்பிய, அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் காய்கறிகள், பழங்களில் பூச்சி மருந்தின் தாக்கம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இருப்பதால் அவை தடை செய்யப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். சமீபத்தில் இந்தியாவில்இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பச்சை மிளகாயில் அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்து கலந்து உள்ளது உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், இது தொடர்ந்தால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப் படுவதோடு மட்டுமல்லாமல் கடும் நடவடிக்கையும் எடுக்கப் படும் என்று துபாய் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


அந்த அளவுக்கு அந்த நாடுகளில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு விழிப்புணர்வுடன் இருக்கிறது.  ஆனால், மேலைநாட்டு இறக்குமதியான கொக்கோ கோலா, பெப்சி முதலிய குளிர்பான உயிர்க்கொல்லிகளை இங்கே தடையில்லாமல், ஒரு கட்டுப்பாடுமில்லாமல் விற்பனைக்கு அனுமதித்திருக்கிறார்கள். அதைக் குடிப்பது இந்த சமூகத்தில் ஒரு கௌரவமான விஷயம் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை மீடியாக்கள் உதவியுடன் தோற்றுவித்திருக்கிறார்கள். 

 
கார்பைட் கல் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், ரசாயனக் கரைசலில் முக்கி எடுத்து விற்பனைக்கு வைக்கப்படும் திராட்சை, மெழுகுக் கரைசலில் பளபளப்பாக்கப்பட்ட ஆப்பிள்,   பூச்சி மருந்தில் நனைக்கப்பட்ட காலிபிளவர், வாரம்  ஒரு முறை பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு விளைவிக்கப்படும் கத்தரிக்காய், முதலியவற்றை தினமும் சாப்பிடும் நம் மக்களைப் பாதுகாக்க நமது அரசாங்கம் ஏதாவது ஒரு தீவிரமான நடவடிக்கையை   இதுவரை எடுத்திருக்கிறதா?  உள்நாட்டிலேயே இந்தியனின் உயிருக்கு மதிப்பே இல்லையா?

0 comments:

Post a Comment